வட மாகாண இப்தார் நிகழ்வு – 2024
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 2024.03.02 செவ்வாய்கிழமை மாலை 05.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்கள், சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண கல்லூரி அதிபர், ஆசிரியர்களும் மற்றும் கதீஜா பாடசாலை அதிபர், ஆசிரியர்களும், கிராம அலுவலரும் பண்பாட்டலுவல்கள் அலகின் கலாசார உத்தியோகத்தர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்களால் கல்லூரி முன்றலில் மரம் நடுகை செய்யப்பட்டதுடன் இப்தார் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஆரம்பமாகியது. மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீம் அவர்களால் கிராஅத் இசைக்கப்பட்டு சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினது தலைமையுரை, மௌலவி எம்.ஏ.பைசர் அவர்களினது “இஸ்லாமும் நோன்பும்” பற்றிய விளக்கவுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களது பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரை என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன. விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகள் யாழ்ப்பாணம் மரியம் ஜூம்மா பள்ளிவாசல் தலைவரால் வழங்கப்பட்டது. நிறைவாக அதான் இசைக்கப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு இப்தார் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.