Print

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவகாலத்தையொட்டி ஆலய சூழலில் நடாத்தப்பட்ட விசேட கலை நிகழ்வு

நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவ காலத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட கலை நிகழ்வுகள் கடந்த 20.08.2022 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள மயிலூரான் அரங்கத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தின் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் அவர்களும், வடக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. அ.சோதிநாதன் அவர்களும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு. ரி.ஜோன் குயின்ரஸ் அவர்களும், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. எஸ்.சுரேந்திரன் அவர்களும் மற்றும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் உப அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி திரு. ச.லலீசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

குறித்த தினத்தில் ஆலயத்தின் மாலை நேர மகோற்சவம் நிறைவடைந்து சுவாமி வீதியுலா வந்த வேளையில் மண்டப முன்றலில் இடம்பெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்ட விருந்தினர்கள், அதனைத் தொடர்ந்து மாலை அணிவித்து ஆராத்தி எடுத்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.எஸ்.முகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் முதல் நிகழ்வாக உரும்பிராய் ஸ்ரீசாயி கலைக்கழக மாணவர்களின் பக்தி இசைப்பாமாலை இசைக்கப்பட்டது. அதனை அடுத்து அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களின் “கணநாய காய” பரதநாட்டியம் நிகழ்வை அலங்கரித்தது. தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து யாழ். இந்திய துணைத் தூதுவரின் பிரதம விருந்தினர் உரையும், பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளரின் சிறப்புரையும் இடம்பெற்றன.

தொடர்ச்சியாக கலைநிகழ்வுகள் வரிசையில் வவுனியா நிருத்திய ஸ்ருதி நாட்டிய கலாலய மாணவர்களின் நடனமும், யாழ். வண்ணை கலைமன்ற மாணவர்களின் முருகன் நடனமும், மானிப்பாய் கலைக்கோவில் மாணவியின் பரதநாட்டியமும், இணுவையூர் குமரன் நர்த்தனாலயம் மாணவர்களின் சண்முகாஞ்சலி நடனமும் நிகழ்வினை மெருகூட்டின. தொடர்ந்து கரம்பொன் முருகமூர்த்தி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கிராமியக் கதம்பம், பொன்னாலை சந்திரபரத கலாலய மாணவர்களின் “ஆறுமுக அழகு” பரதநாட்டிய ஆற்றுகை, காரைநகர் வலந்தலை அத்திபுரக் கந்தன் கலாமன்றத்தினரின் ஹார்மோனிய இசைவிருந்து, அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவர்களின் நடன அர்ப்பணம், மன்னார் ஜெயானந்த ஜீவ நர்த்தனாலய மாணவர்களின் காவடிச்சிந்து, அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களின் கோலாட்டம், நல்லூர் சாரங்கா இசைமன்ற மாணவர்களின் பக்திப்பாடல்கள் ஆகியவற்றுடன் கலை நிகழ்வுகளின் நிறைவாக மன்னார் ஜெயானந்த ஜீவ நர்த்தனாலய மாணவர்களின் முருகன் கௌத்துவம் நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன.

தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளரின் நன்றியுரையுடன் இக் கலை நிகழ்வானது இரவு 09.45 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

 

 

Hits: 1175