வர்ண இரவு – 2025
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 49வது தேசிய மட்ட விளையாட்டு விழாவில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் “வர்ண இரவு-2025” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் புதன்கிழமை 04.03.2026 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகளையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் அவர்களின் வரவேற்புரையுடனும், அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையுரையுடனும் ஆரம்பமான இந்நிகழ்வில், நடைபெற்று முடிந்த 49வது தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் தடம் பதித்த வீர, வீராங்கனைகள் 95 பேருக்கும் மற்றும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 108 பேருக்கு வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள், பணப்பரிசில்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு நூறாயிரம் ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு 60000.00 ரூபாவும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு 30000.00 ரூபாவும் பணப்பரிசில்களாக வழங்கப்பட்டன. குழுநிலை விளையாட்டுக்களில் முதலிடம் பெற்ற அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 20000.00 ரூபாவும், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா 15000.00 ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 10000.00 ரூபாவும் வழங்கப்பட்டன. மேலும் சாதனை படைத்த வீரர்களை உருவாக்கிய பயிற்றுவிப்பாளர்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வீரர்களை பயிற்றுவித்தவர்களுக்கு முறையே 20000.00, 15000.00, 10000.00 ரூபா பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வர்ண இரவு நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர், வடக்கு மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்திணைக்கள உத்தியோகத்தர்கள், வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றறோர் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

































