வடக்கு மாகாண தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2025
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலா பணியகம் மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை இணைந்து நடாத்திய தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா 2025.04.16 புதன்கிழமை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் ஆரம்பமாக காலை 7.00 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண தமிழ் சிங்கள புத்தாண்டு விழா இனிதே ஆரம்பமானது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அவர்களுடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுற்றுலா பணியக தலைவர், மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர், மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர், கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், மாகாண கல்வி பணப்பாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலய கல்வி பணிப்பாளர், யாழ் வலய கல்விப் பணிப்பாளர், வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர், வலிதெற்கு பிரதேச சபை செயலாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி பிரதி அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களது தமிழ் இன்னிய இசையுடன் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் பாரம்பரிய குடில், சிங்கள பாரம்பரிய குடில் ஆகியவற்றை விருந்தினர்கள் பார்வையிட்டதுடன் கௌரவ ஆளுநரால் புத்தாண்டு பொங்கல் தொடக்கி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலினை விருந்தினர்கள் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனையடுத்து வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான யா/ஸ்கந்தவரோதயா கல்லூரி, யா/அருணோதயா கல்லூரி, யா/இராமநாதன் கல்லூரி, மாணவர்களினதும் வெலிஓயா சுயரத்த ரங்க கலை மன்றத்தினரதும் புதுவருட கிராமிய கதம்ப நிகழ்வும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அத்துடன் இயற்கையோடு இயைந்த வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கியதான வேடப்புனைவு நிகழ்வும் மைதானத்தை அணிசெய்தன. அத்துடன் உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கு முகமாக உழவர் சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இணுவில் கங்கை தமிழ் மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் அவர்களின் வரவேற்புரை, கல்வி அமைச்சு செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களது பிரதம விருந்தினர் உரை என்பன உள்ளடங்கலாக கலை நிகழ்வுகளும் காட்சியளித்தன தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்களால் தொடக்கிவைக்கப்பட்டதுடன். வழுக்கு மரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், தேசிக்காய் கரண்டி சமநிலை ஓட்டம், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், யானைக்கு கண்வைத்தல், தலையணை சண்டை, போர்த் தேங்காய் அடித்தல், பலூன் ஊதி உடைத்தல், சாக்கோட்டம் (ஆண்,பெண்), கிட்டி இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
மேடை நிகழ்வில் இணுவில் திருநெறிய தமிழ் மறைக்கழகம் மாணவர்களது வரவேற்பு நடனமும், யா/புங்குடுதீவு மாணவர்களது குடக்கூத்து நடனமும், நல்லூர் ஹிமாலயா நடனக் கல்லூரி மாணவர்களின் வாள் நடனமும், பருத்தித்துறை பரத சிவாலயா கலைமன்ற மாணவர்களது புதுவருட ஆடற் கதம்பமும், உடுவில் பிரஹரிஸ் மன்றத்தினரது இசைச் சங்கம நிகழ்வும், சங்கானை பதஞ்சலி ஷேத்ர நடனாலயத்தினரது பொம்மலாட்ட நிகழ்வும், பளை கங்கை தமிழ் மன்றத்தின் கிராமிய கதம்பமும் சுயத்துரங்க கலை மன்றத்தின் கிராமிய நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு விருந்தினர்களினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிறைவாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சு.விஜயரத்தினம் அவர்களது நன்றி உரையினைத் தொடர்ந்து நிகழ்வானது பி.ப 3.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.