பிரதேச பண்பாட்டு விழாக்கள்(II) - 2024
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகானது கலாசார செயற்திட்டத்தினூடாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து வருடந்தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வடமாகாணத்தின் பண்பாட்டிருப்பினை மேம்படுத்துவதிலும், அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில் பண்பாட்டலுவல்கள் அலகினுடைய அனுசரணையுடன் சாவகச்சேரி, நானாட்டான், மாந்தைமேற்கு, மடு, மருதங்கேணி, காரைநகர் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகங்கள் அவற்றின் பிரதேச கலாசார பேரவைகளுடன் இணைந்து பிரதேச பண்பாட்டு விழாவினை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியிருந்தன.
இப்பண்பாட்டு விழாவானது அந்த பிரதேசங்களினுடைய பிரதேச செயலாளர்;களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதேசத்துக்கேயுரித்தான கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. நாட்டுக்கூத்துக்கள், நடனம், நாடகம், விழிப்புணர்வு நாடகம், கிராமிய நடனம், தனிப்பாடல், குழுப்பாடல், இசைக்கச்சேரி, கிராமியக்கலைக் கதம்பம், வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் பிரதேச கலைஞர்களதும், மாணவர்களினதும் ஆற்றல்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அத்துடன் நிகழ்வில்; அவ்வவ் பிரதேசங்களினுடைய சிறந்த இளம் கலைஞர்களும், மூத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.